திரிபலா சூரணத்தில் பயன்படுத்தப்படும் இன்னொரு முக்கிய காய் நெல்லிக்காய்.
ஆயுர்வேதத்தில் இதனை வயஸ்தா என்று கூறுவார்கள். வயஸ்தா என்றால் மூப்படையாமல் காக்கச்செய்வது என்று பொருள். இதற்கு சிவா என்றும், பலம் என்றும் பெயருண்டு. தாத்ரீ பலம் என்றும் அழைப்பார்கள். அமிர்தத்துக்கு சமமானதால் அமிர்தா என்ற பெயரும் உண்டு. ரத்த நோய்கள், பித்த நோய்கள் போன்றவற்றையும் குறைக்கும்.
கல்ப மருந்து, ரசாயன மருந்து, பித்தத்தை தணிப்பது. 5 ரசங்களை உடையது, உப்பு சுவை இல்லாதது. நெல்லிக்காயை மஞ்சள் பொடியுடன் சேர்த்து சாப்பிட பிர மேகம் கட்டுப்படும். ஸரம் எனும் மலத்தை இளக்கும் குணம், இதற்கு உண்டு. சியவனபிராச ரசாயனம் இதன் மூலம் செய்யப்படுகிறது.
முடிவளர்க்கும் எண்ணைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. எனவே நெல்லிக்காய்க்கு கேஷ்யம் எனும் குணம் உண்டு. ரத்த பித்தம் எனும் ரத்த கசிவு நோய்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
முக்குற்றத்தையும் இது மாற்றும். தாத்ரி அரிஷ்டம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு வேளை உணவு உட்கொள்ளும் போது தொடக்கத்திலும், நடுவிலும், இறுதியிலும் ஒருவன் இதனை உட்கொண்டு வந்தால் நோயின்றி வாழ்வான் என ராஜவல்லப நிகண்டு சொல்கிறது.
நெல்லிக்காய் பொடியை நெல்லிக்காய் சாறு கொண்டு பாவனை செய்து சர்க்கரையும், தேனும், நெய்யும் சேர்த்து லேகியம் போல் சாப்பிட்டு வர நீண்ட ஆயுளுடன் சிரஞ்சீவியாக வாழ முடியும் என்று கூறப்பட்டுள்ளது. நெல்லி, யுபோர்பியேசி குடும்பத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது இந்திய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்த படுகிறது. நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற இனங்கள் உண்டு.
மற்ற எந்த பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிக அளவு வைட்டமின் சி நெல்லிக்காயில் உள்ளது. ஒரு நெல்லியில் தோடம்பழம் எனப்படும் புளிப்புப் பழங்கள் முப்பதில் உள்ள அளவுக்கு இணையாக வைட்டமின் சி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்றாடம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.